சரவாக் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஐந்து பேரின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.
இந்த விபத்தில் 4 சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஒரு விமானி என மொத்தம் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தமக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக அன்வார் தமது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமது மற்றும் தமது மனைவி வான் அஸிஸாவின் ஆழ்ந்த அனுதாபங்களையும் பிரார்த்தனைகளையும் அன்வார் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கடினமான நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான தனியுரிமையை வழங்குமாறும், அதிகாரிகளின் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகும் வரை ஊகங்களைத் தவிர்க்குமாறும் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.








