கோலாலம்பூர், பிப்ரவரி.16-
அரசாங்கத்திற்கும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிற்கும் இடையே கையெழுத்தான சுமார் 1.1 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஒப்பந்தம் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தம் மிகவும் "அவசரமாகவும்", அரசாங்கத்திற்குச் சாதகமற்ற முறையிலும் முடிக்கப்பட்டதாகச் சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் இந்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
முதற்கட்டத் தகவல்களின்படி, இந்த ஒப்பந்தத்திற்கு நிதி அமைச்சு மற்றும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு ஆகியவற்றின் முறையான ஒப்புதல் பெறப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி, இந்த ஒப்பந்தம் தொடர்பான பல முக்கிய ஆவணங்களை பொருளாதார அமைச்சிடமிருந்து எஸ்பிஆர்எம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து எஸ்பிஆர்எம் செயல்பாட்டு துணை தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் குசைரி யாஹ்யா தொடர்பு கொண்டு கேட்ட போது, விசாரணை நடைபெறுவதை உறுதிப்படுத்தினார். இருப்பினும், மேலதிக விவரங்களைத் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.








