மலாக்கா, மே.31-
சமூக ஊடகங்களில் பணம் செலுத்தி விளம்பரங்களை வெளியிடும் அனைத்து விளம்பரதாரர்களும் இனி தங்களது அடையாளத்தைக் கட்டாயம் சரிபார்க்க வேண்டும் என்று தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.
இணைய மோசடிகள், இணையச் சூதாட்டம் மற்றும் பிரபலங்களின் அடையாளங்களைத் தவறாகப் பயன்படுத்தி வெளியிடப்படும் விளம்பரங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையானது, இணையப் பாதுகாப்புச் சட்டம் 2025-இன் கீழ் அமல்படுத்தப்படும் இடர் தணிப்புக் குறியீடான RMC-இன் புதிய விதிமுறைகளில் ஒன்றாகும்.
மலேசியாவில் 80 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட சமூக ஊடக கணக்குகளுக்குப் பொருந்தும் வகையில், இந்த புதிய விதிமுறையானது நாளை முதல் அமலுக்கு வருகின்றது.
இதன் மூலம் போலி முதலீட்டு திட்டங்கள், நிதி மோசடிகள் மற்றும் இணைய சூதாட்ட விளம்பரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.








