பாலிக் பூலாவ், மே.31-
சாலையின் நடுவே காரை நிறுத்தி, மற்றொரு ஓட்டுநரை மிரட்டியதுடன், ஆபாச சைகைகள் காட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட 37 வயது நபருக்கு மேலும் இரண்டு நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் அனுவால் அப்துல் வஹாப் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை ஜாலான் துன் டாக்டர் அவாங் பகுதியில் நடந்த சம்பவத்தில், பெரோடுவா மைவி காரை ஓட்டிச் சென்ற சந்தேக நபர், புகார் அளித்தவரின் வாகனத்தின் முன் திடீரென குறுக்கே நுழைந்து வாகனத்தை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் காரில் இருந்து இறங்கிய அந்நபர், இரும்புக் கம்பி போன்ற பொருளை ஏந்தி பாதிக்கப்பட்டவரின் வாகனத்தை நோக்கிச் சுழற்றியுள்ளார்.
இந்தச் சம்பவம் டாஷ் கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் அந்நபரைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதனிடையே, அந்நபர் மீது ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.








