சிங்கப்பூர், மே.31-
உலகளவில் அனைத்துலகச் சட்டங்களை அமல்படுத்துவதில் இரட்டை நிலைப்பாடு அதிகரித்து வருவது குறித்து மலேசியா கவலை தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் 23-வது Shangri-La பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின், அனைத்துலகச் சட்ட மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட நாடுகளின் வலிமை மற்றும் செல்வாக்கைப் பொறுத்து மாறுபடுகின்றன என்று தெரிவித்துள்ளார்.
வளரும் நாடுகள் ஒப்பந்தங்களை மீறினால் கடுமையான கண்டனங்களும் அழுத்தங்களும் எதிர்கொள்கின்றன. ஆனால் சக்திவாய்ந்த நாடுகளோ அல்லது அவற்றின் கூட்டாளிகளோ அதே செயலைச் செய்தால், உலகளாவிய எதிர்வினை மிகவும் மந்தமாக இருப்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகள் புவிசார் அரசியல் போட்டிகளால் பலவீனமடைந்து வருவதாகவும், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் அனைத்துல சட்ட மீறல்கள் போன்ற விவகாரங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் மட்டுமே எதிர்வினைகள் வெளிப்படுவது உலகின் நம்பிக்கையை பாதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








