ஈப்போ, மார்ச்.08-
கெரிக், கெரினாய் பகுதியில் Telekom Malaysiaவிற்குச் சொந்தமான கேபிள்களைத் திருடிவிட்டு தப்ப முயன்ற இருவரைப் பிடிக்க முயன்ற போது, அவர்கள் காவற்படையினர் வாகனத்தின் மீது கேபிள் வெட்டும் கருவிகளையும் ஆணிகளையும் வீசி எறிந்தனர். துரத்திச் சென்ற காவற்படை அதிகாரியிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது, அவர்கள் ஓட்டி வந்த வாகனம் கெடா, பாலிங்கில் உள்ள ஒரு வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. எனினும் வீட்டில் இருந்தவர்களுக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை.
வாடகைக்கு எடுக்கப்பட்ட அந்த வாகனத்தில் இருந்து 20 கேபிள் சுருள்களையும் திருட்டுக் கருவிகளையும் மீட்டெடுத்த கெரிக் காவற்படையினர், தப்பியோடிய இருவரையும் தீவிரமாகத் தேடி வருவதாக அதன் தலைவர் சுப்ரிண்டெண்டன் அப்துல் சமாட் ஒத்மான் தெரிவித்தார்.








