சுபாங் ஜெயாவில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இருவர், ஸ்கைலிஃப்ட்ட்டில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தனர். மற்றொருவர் காயமடைந்தார்.
பொதுமக்களில் ஒருவர் அது குறித்து தகவல் கொடுத்ததாக சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் வான் அஸ்லான் வான் மாமட் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த காவல் துறையினர், அடுக்குமாடி குடியிருப்பின் நுழைவாயில் பகுதியில் மூன்று ஆடவர்கள் கீழே விழுந்து கிடந்ததைக் கண்டனர். அவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதிச் செய்யப்பட்டது. மற்றொருவர் தலை மற்றும் மார்பில் காயமடைந்ததால் சிகிச்சைக்காக செர்டாங் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக வான் அஸ்லான் கூறினார்.
38 முதல் 46 வயதுக்குட்பட்ட அம்மூவரும் ஸ்கைலிஃப்ட்ட்டைப் பயன்படுத்தி ஐந்தாவது மாடியில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது கனத்த மழை பெய்து கொண்டிருந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் எந்தக் குற்றச் செயலும் கண்டறியப்படவில்லை. அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக வான் அஸ்லான் தெரிவித்தார்.
அச்சம்பவம் குறித்து ஆரூடங்கள் பரப்ப வேண்டாம் என அவர் பொதுமக்களுக்கு நினைவுறுத்தினார். அதே வேளை விவரம் தெரிந்தவர்கள் விசாரணைக்கு உதவ அருகில் உள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.








