கோலாலம்பூரில் உரிமம் இல்லாமல் சுற்றுலா சேவைகளை நடத்தி வந்தவர்களுக்கு எதிராக சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது!
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த அமலாக்க நடவடிக்கையில், 1992 ஆம் ஆண்டு சுற்றுலாத் தொழில் சட்டத்தின் கீழ் 15 நோட்டிஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில், உரிமம் இன்றி சுற்றுலா வர்த்தகம் நடத்தியதாக 9 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 3 சுற்றுலாத் தளங்கள், 9 வர்த்தக வளாகங்கள் மற்றும் 3 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேலும், உரிய உரிமம் இல்லாமல் சுற்றுலா வழிகாட்டிகளாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களையும் அதிகாரிகள் கண்காணித்தனர்.
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்ல தனியார் அல்லது உரிமம் பெறாத வாகனங்களைப் பயன்படுத்தியது, உரிம நிபந்தனைகளை மீறியது மற்றும் உரிமம் இல்லாதவர்களுடன் வர்த்தகம் செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களும் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் விசாரணைகள் முடிந்த பின்னர், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சு எச்சரித்துள்ளது.
உரிமம் இல்லாமல் சுற்றுலா சேவைகளை வழங்குவோர் உடனடியாக அவற்றை நிறுத்துமாறும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.








