முஸ்லிம்கள் அல்லாதவர்கள், குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இஸ்லாம் குறித்து நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் பள்ளிவாசல்களின் கதவுகள் திறந்திருக்க வேண்டும் என துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸாஹிட் ஹமிடி வலியுறுத்தியுள்ளார்.
பள்ளிவாசல்களுக்கு வரும் பார்வையாளர்களை வரவேற்று, அவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பதுடன், பள்ளிவாசல்களின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் இஸ்லாமிய சிறப்புகளை எடுத்துரைப்பதன் மூலம் இஸ்லாம் குறித்த தவறான புரிதல்களை களைய முடியும் என்று அவர் கூறினார்.
ஒரு நல்ல அனுபவம், பல ஆண்டுகளாக உருவான தவறான கருத்துகளையே மாற்றக்கூடும் என்றும் ஸாஹிட் குறிப்பிட்டார்.
இதனிடையே, பேராக், பகான் டத்தோவில் உள்ள துமினா ஹமிடி பள்ளிவாசல், நாட்டின் 98ஆவது சுற்றுலா பள்ளிவாசலாக அங்கீகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பள்ளிவாசல்களின் சிறப்பு அதன் பிரமாண்டமான கட்டடக்கலையில் அல்ல; சமூகங்களை ஒன்றிணைத்து, அறிவு, நல்லொழுக்கம் மற்றும் இரக்கத்தை வளர்ப்பதில் அவை ஆற்றும் பங்களிப்பில்தான் உள்ளது என்றும் ஸாஹிட் கூறினார்.








