வாக்காளர்கள் வழங்கிய மக்கள் ஆணையை, பதவிக்காலம் முடிவதற்கு முன்பே நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைவிடக்கூடாது என பிகேஆர் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கருத்து வேறுபாடுகள் அல்லது சிக்கலான சூழ்நிலைகள் ஏற்பட்டாலும், தங்கள் தொகுதி மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்ற வேண்டிய பொறுப்பு இருப்பதாக அவர் கூறினார்.
“நாங்கள் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். மக்கள் வைத்த நம்பிக்கையை வெறுமனே கைவிட்டு விலகுவது தவறு,” என ரமணன் தெரிவித்தார்.
சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, பிகேஆரிலிருந்து விலகி பெர்சாமா மலேசியாவில் இணைந்த வோங் சென் விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
மேலும், அரசியல் கட்சி அல்லது எந்தவொரு தலைவரின் மீதான விசுவாசத்தை விட, மக்களுக்கு சேவை செய்வதே தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் முதன்மையான கடமை என்றும் ரமணன் வலியுறுத்தினார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடர்ந்து மக்களிடம் நேரடியாகச் சென்று அவர்களின் பிரச்சினைகளை கவனிக்குமாறு வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.








