சுபாங், சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலையத்தின் ஓடுபாதை, ஹெலிகாப்டர் தீப்பிடித்த சம்பவத்தைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
மதியம் 2.57 மணிக்கு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியதாக மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையமான சிஎஎஎம் (CAAM) தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஓடுபாதை மூடப்பட்டிருந்ததால் எட்டு வருகை விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதுடன், மூன்று புறப்பாடு விமானங்கள் தாமதமாகின.
இன்று மதியம் 12.28 மணியளவில், பராமரிப்புப் பணியின் ஒரு பகுதியாக இயந்திரத்தை தரையில் இயக்கிப் பரிசோதித்த போது காமோஃப் (Kamov Ka-32S) ரக ஹெலிகாப்டர் திடீரென தீப்பிடித்தது.
ஹெலிகாப்டரில் இருந்த விமானி உள்ளிட்ட நான்கு உக்ரைன் நாட்டவர்கள் உயிர் தப்பினர். எனினும், சிதறிய பாகம் தாக்கியதில் ஒருவருக்கு சொற்ப காயம் ஏற்பட்டது.
பயணிகள் தங்களது விமான நிறுவனங்களிடம் விமான நேரம் குறித்த புதிய தகவல்களைச் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








