இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள புளோரஸ் தீவை இன்று அதிகாலை 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது!
இதுவரை மலேசியர்கள் யாரும் பாதிக்கப்பட்டதாகவோ, காணாமல் போனதாகவோ தகவல் இல்லை என ஜகார்த்தாவில் உள்ள மலேசியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இப்பகுதியில் இருந்த மலேசியர்கள், சுற்றுலாப் பயணிகள் உட்பட பலரையும் தூதரகம் தொடர்பு கொண்டு, அவர்களின் நிலை குறித்து தகவல்களைப் பெற்றுள்ளது.
அதிகாலை 4.58 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி, Mbay நகரிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் கடலில், 15 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்ட நிலையில், கடல் மட்டம் கண்காணிக்கப்பட்ட பின்னர் காலை 7.31 மணிக்கு அது திரும்பப் பெறப்பட்டது.
இதற்கிடையே, நிலநடுக்கம் மற்றும் அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்வுகளால் 20 பேர் உயிரிழந்ததாகவும், 6 பேர் காயமடைந்துள்ளதாகவும், மேலும் இருவர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 2,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.








