கிள்ளான், பிப்ரவரி.27-
கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் ஏற்பட்ட நிலக்குழி விபத்தில் சிக்கி மாயமான இந்தியச் சுற்றுலாப் பயணி விஜயலட்சுமியின் குடும்பத்தினர், அவருக்கு மரணச் சான்றிதழ் வழங்குமாறு மலேசிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2024 ஆகஸ்ட் 23-ஆம் தேதி, கோலாலம்பூரின் பரபரப்பான ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியில் நடந்து சென்ற போது, திடீரென ஏற்பட்ட 8 மீட்டர் ஆழமுள்ள நிலக்குழியில் விழுந்து விஜயலட்சுமி மாயமானார். ஒன்பது நாட்களாகத் தொடர்ந்து தீவிரத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், நிலத்தடி நீரோட்டம் மற்றும் மீட்புக் குழுவினரின் பாதுகாப்பு கருதி செப்டம்பர் 1-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டது.
விஜயலட்சுமியின் உடல் மீட்கப்படாத நிலையில், அவர் இறந்து விட்டதாகக் கருதி மரணச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் தற்போது வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக மலேசிய அதிகாரிகளுடன் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அக்குடும்பத்தினர் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் எம். பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
இன்று கிள்ளான், தாமான் இந்தானில் உள்ள ஓர் உணவகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் வழக்கறிஞர் பார்த்திபன் இதனைத் தெரிவித்தார். இந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் விஜயலெட்சுமியின் மகன் எம். சூர்யாவும் கலந்து கொண்டார்.
உடல் கிடைக்காத நிலையில் ஒருவரை இறந்ததாக அறிவிக்க நீண்ட காலம் ஆகலாம். இருப்பினும், இது ஒரு தவிர்க்க முடியாத விபத்து என்பதால், "சிறப்பு அடிப்படையில்" விரைவில் சான்றிதழ் வழங்க அவர்கள் கோரியுள்ளனர்.
குடும்பத்தினருக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு மற்றும் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு இந்த மரணச் சான்றிதழ் மிக அவசியமான ஆவணமாக உள்ளது என்று வழக்கறிஞர் பார்த்திபன் தெரிவித்தார்.








