ஜகார்த்தா விமான நிலையத்தில் 25 கிலோ எடையுள்ள 70,000-க்கும் மேற்பட்ட எக்ஸ்டசி மாத்திரைகளைக் கடத்த முயன்றதாக மலேசிய ஏர்லைன்ஸ் விமானி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் அந்த விமானி, பயணிகளின் உயிருடன் விளையாடியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
அந்த விமானிக்கு நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர் ஐஸ் மற்றும் கோகோயின் போன்ற போதைப்பொருட்களைப் பயன்படுத்தியது உறுதியாகியுள்ளது. அவர் போதை தலைக்கேறிய நிலையில் பயணிகள் விமானத்தை இயக்கியது மக்களின் உயிருக்கு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பாதுகாப்பு நிபுணர் பேராசிரியர் டாக்டர் முகமது மிசான் எச்சரித்துள்ளார். விமானப் பணியாளர் என்ற தகுதியைப் பயன்படுத்தி அவர் போதைப்பொருட்களை எளிதாகக் கடத்த முயன்றுள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, விமான நிலையங்களின் பாதுகாப்பு மற்றும் ஊழியர்களைப் பரிசோதிக்கும் நடைமுறைகளை மறுஆய்வு செய்ய போக்குவரத்து அமைச்சு அவசரக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்துள்ளது.








