கோலாலம்பூர், ஆகஸ்ட் 30-
சுதந்திர தின மாதத்தை முன்னிட்டு தேசிய கொடியை பறக்கவிடும் கலாச்சாரம் மலேசியர்களிடையே குறைந்து வருவது வருத்தம் அளிப்பதாக உள்ளது என்று கூலிம் நகராண்மை கழகத்தின் தலைவர் டத்தோ ஹாஜி எல்மி யூசோஃப், கவலை தெரிவித்துள்ளார்..
மலேசிய குடிமக்களாகிய நாம் உற்சாகத்துடன் ஆகஸ்ட் சுதந்திர மாதத்தில் தேசிய கொடியான ஜாலூர் கெமிலாங்- கை பறக்கவிட்டு நாட்டின் மீது நாம் கொண்டுள்ள பற்றை வெளிப்படுத்த வேண்டும் என்றார் எல்மி யூசோஃப், கேட்டுக்கொண்டார்.
90 ஆம் ஆண்டுகளில் மக்கள், தங்கள் வாகனங்களில் தேசியக்கொடியை பறக்கவிட்டு, தங்களின் தேசப்பற்றை புலப்படுத்துவர். அத்தகைய கலாச்சாரம் காலப்போக்கில் மறக்கப்பட்ட ஒன்றாகி விட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் கூலிம் நகராண்மை கழகத்தின் ஏற்பாட்டில் நாட்டின் 67 ஆவது சுதந்திரத் தின கொண்டாட்டத்தையொட்டி " KONVOI MERDEKA" எனும் சுதந்திர மாத மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் எல்மி யூசோஃப், இதனை தெரிவித்தார்.
" KONVOI MERDEKA" மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தையொட்டி 67 கிலோ மீட்டர் தொலைவில் கூலிம் மாவட்டத்திலுள்ள குறிப்பிட்ட இடங்களை மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள், ஜுலோர் கெமிலாங் கொடியை பறக்கவிட்டவாறு ஊர்வலமாக வந்து, தங்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தினர்.
மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தின் போது மக்கள் இரு மருங்கிலும் மெர்டேக்கா, மெர்டேக்கா, மெர்டேக்கா என்று கூறி, தேசியதின கொண்டாட்டத்தை வரவேற்றது நிகழ்விற்கு மேலும் சிறப்பு சேர்த்தது.








