ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் சிறப்பு அழைப்பை ஏற்று, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று காலை மாஸ்கோவிற்குப் புறப்பட்டார். வரும் மே 9-ஆம் தேதி நடைபெறவுள்ள ரஷ்யாவின் 'வெற்றி நாள்' கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள மாமன்னருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணியளவில் ஜோகூர், செனாய் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து மாமன்னரின் தனி விமானம் ரஷ்யா நோக்கிப் புறப்பட்டது. மாமன்னருக்கு விடுக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்பு அழைப்பு, மலேசியா மீது ரஷ்யா வைத்துள்ள உயரிய மதிப்பைக் காட்டுகிறது.
விமான நிலையத்தில் ஜோகூர் இளவரசர்கள், மாநில மந்திரி பெசார் மற்றும் உயர் போலீஸ் துறை உயர் அதிகாரிகள் மாமன்னரை வழியனுப்பி வைத்தனர்.








