உள்துறை அமைச்சரின் அறிக்கைக்கு அரசு சாரா இயக்கம் கண்டனம்
ஜூலை 03-
நாட்டின் உள்துறை அமைச்சராக தாம் பொறுப்பேற்ற இந்த இரண்டு ஆண்டு காலத்தில் போலீசாரால் காயம் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படும் எந்தவொரு தடுப்புக்காவல் மரணச் சம்பவமும் நிகழவில்லை என்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அரசு சாரா இயக்கம் ஒன்று கண்டனம் தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட தடுப்புக்காவல் கைதி, போலீசாரால் காயம் ஏற்படுத்தப்பட்டு, மரணம் அடைந்துள்ளரா? இல்லையா? என்பதை மரண விசாரணை நீதிபதிதான் முடிவு செய்ய முடியுமே தவிர அமைச்சர் அல்ல என்று தடுப்புக்காவல் மரணங்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றுக்கு முடிவு கட்டும் EDIC ( எடிக் ) அமைப்பின் இணைத் தலைவர் எம். விஸ்வநாதன் தெரிவித்தார்.
விசாரணைக் கைதிகளின் தடுப்புக்காவல் மரணங்கள் குறித்து எந்தவொரு மரண விசாரணை நடத்தப்படாமலேயே, போலீசாரால் காயம் விளைவிக்கப்பட்ட எந்தவொரு மரணச் சம்பவமும் பதிவாகவில்லை என்று அமைச்சர் சைபுடின் முடிவுக்கு வந்திருப்பது அவரின் அறியாமையை காட்டுகிறது என்று விஸ்வநாதன் குறிப்பிட்டார்.
தடுப்புக்காவல் மரணங்கள் தொடர்பில் உள்துறை அமைச்சர் என்ற முறையில் மரண விசாரணை நடத்துவற்கு அமைச்சர் சைபுடின் இதுவரையில் எத்தனை உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் என்பதை துல்லியமாக தெரிவிக்க முடியுமா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் சைபுடினின் இந்த அறிவிப்பு உண்மையிலேயே எரிச்சலை ஏற்படுத்துகிறது.
போலீசாரால் காயப்படுத்தப்பட்ட மரணங்கள் குறித்து எந்தவொரு பதிவு இல்லை என்று கூறியிருக்கும் சைபுடின் எதனை அளவு கோலாக பயன்படுத்தி, இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்று விஸ்வநாதன் கேள்வி எழுப்பினார்.
தடுப்புக்காவல் மரணங்கள் குறித்து மரண விசாரணை நடத்துவதற்கு உத்தரவே பிறப்பிக்கப்படாத நிலையில், அந்த மரணத்திற்கான காரணம் கண்டு பிடிக்கப்படாத பட்சத்தில், தம்முடைய பதவி காலத்தில் போலீஸ் சம்பந்தப்பட்ட தடுப்புக்காவல் மரணங்கள் எதுவும் நிகழாதது போல் மார்ட்டிக்கொள்வதில் அர்த்தமில்லை என்று அந்த அமைப்பின் பொறுப்பாளர் சாடினார்.








