கோலாலம்பூர், நவம்பர்.26-
நாட்டில் சில முக்கிய பிரபலங்கள் சம்பந்தப்பட்ட விசாரணைகள், இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பது குறித்து அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஜெலுத்தோங் எம்.பி. ஆர்எஸ்என் ராயர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களை அச்சத்தில் ஆழ்த்தக்கூடிய தாக்குதல் சம்பவங்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கு தீர்வு காணப்படாதது குறித்து அரச மலேசிய போலீஸ் படைக்கு தலைமையேற்று இருக்கும் உள்துறை அமைச்சு விளக்கம் அளிக்க வேண்டும் என்று ராயர், இன்று மக்களவையில் கோரிக்கை விடுத்தார்.
உள்துறை அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 150 மில்லியன் ரிங்கிட், 606 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்த நிலையில் பிரபலங்கள் சம்பந்தப்பட்ட விசாரணைகளுக்கு இன்னும் தீர்வு காணாமல் இருப்பது ஏன் என்று மக்கள் வினவுகின்றனர் என்று ராயர் கேள்வி எழுப்பினார்.
மக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்து வரும் அரச மலேசியப் போலீஸ் படைக்குத் தாம் நன்றி பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் மக்கள் எழுப்பும் சில கேள்விகளை வெறுமனே கிடப்பில் விட்டு விட முடியாது என்று ராயர் குறிப்பிட்டார்.
இன்று நாடாளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டு பட்ஜெட் குறித்து செயற்குழு அளவிலான விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையில் ராயர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் தனது முன்னாள் கணவரைக் கண்டுப்பிடித்து தற்போது 16 வயதாகும் தனது குழந்தை பிரசன்னா டிக்ஷாவை மீட்க வேண்டும் என்று கோரி கடந்த சனிக்கிழமை கோலாலாம்பூரில் ஆட்சேப நடைப்பயணத்தை மேற்கொண்ட எம். இந்திராகாந்தி விவகாரத்தில் போலீஸ் துறை இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் ராயர் வினவினார்.
மேலும் பாதிரியார் ரேய்மண்ட் கோ, சமூக ஆர்வலர் உஸ்தாஸ் அம்ரி சே மாட், தம்பதியர் ரூத்- ஜோஷுவா மற்றும் வர்த்தகப் பெண்மணி டத்தின் ஶ்ரீ பமேலா லிங் ஆகியோர் மர்மமான முறையில் காணாமல் போனது தொடர்பில் போலீஸ் துறையின் விசாரணை என்னவானது என்று ராயர் கேள்வி எழுப்பினார்.
காணாமல் போன இவர்களைப் பற்றிய விசாரணைக்குப் போலீஸ் துறை தீர்வு காணப் போகிறதா? உண்மையிலேயே இவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று சொல்லப் போகிறதா? என்ற ராயர் வினவினார்.








