ஜகார்த்தாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மலேசியா ஏர்லைன்ஸ் விமானி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை அவர் இயக்கவில்லை என்றும், வெறும் பார்வையாளராகவே பயணித்தார் என்றும் மலேசியா ஏவியேஷன் குரூப்பான எம்ஏஜி விளக்கமளித்துள்ளது. தகுதி வாய்ந்த இரு வேறு விமானிகளாலேயே விமானம் பாதுகாப்பாக இயக்கப்பட்டதாக அந்த நிறுவனம் உறுதிபடக் கூறியுள்ளது.
கைது செய்யப்பட்ட 39 வயதுடைய அந்த உதவி விமானி, கடந்த இரண்டு நாட்களாகப் பணியில் இருக்கவில்லை. இந்த நிலையில், ஜகார்த்தா சொகார்னோ ஹாத்தா அனைத்துலக நிலையத்தில் 45 மில்லியன் மலேசிய ரிங்கிட் மதிப்பிலான 25 கிலோ போதைப்பொருட்களைக் கடத்த முயன்ற போது அவர் இந்தோனேசிய அதிகாரிகளால் பிடிபட்டார்.
அவரிடமிருந்து எக்ஸ்டசி மற்றும் மெத்தம்பேட்டமைன் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், போதைப்பொருள் சிறுநீர் சோதனையை ஏமாற்றுவதற்காக அவர் போலி சிறுநீர் பாட்டில் ஒன்றையும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஊழியரின் இந்த செயல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எம்ஏஜி தெரிவித்துள்ளது.








