மசூதி மற்றும் ஆலயம் போன்ற வழிபாட்டு தலங்கள் தொடர்பான சமய விவகாரங்களை கவனமாகவும் பொறுப்புடன் கையாள வேண்டும் என்று பாஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இஸ்லாம் மற்றும் இந்து சமுதாயத் தலைவர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள தகராறுகளில், மேலும் பதற்றத்தை தூண்டாமல் அமைதியான முறையில் அவை கையாளப் பட வேண்டும் என்றும் பாஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
மலேசியா பல்வேறு இனங்கள் மற்றும் சமயங்களைக் கொண்ட நாடு என்பதால், இன மற்றும் சமயம் சம்பந்தமான பிரச்சினைகளை கையாளும் போது நமது சமூக அமைப்பை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தக்கியுடின் ஹசான் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு சமூகங்களுக்கிடையில் வெறுப்பு, பகைமை மற்றும் அவநம்பிக்கையை உருவாக்க முயற்சிப்பது மிகவும் பொறுப்பற்ற செயலாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நிலவி வரும் பதற்றங்களை தெளிவாகவும் நியாயமாகவும் கையாளுவதில் அதிகாரிகளுக்கு மிக முக்கியமான பங்கு உள்ளதாக முன்னாள் சட்ட அமைச்சரான தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.








