வெளிநாட்டவர்களை குறிவைத்து கடத்தலில் ஈடுபட்ட கடத்தல் கும்பல் ஒன்றை மலேசிய போலீசார், சிங்கப்பூர் போலீசாருடன் இணைந்து வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது கடத்தி வைக்கப்பட்டிருந்த இருவர் மீட்கப்பட்டதுடன், 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மீட்கப்பட்டவர்களில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஓய்வூதிய ஆலோசகரும், சீனாவைச் சேர்ந்த பெண்ணும் அடங்குவர்.
இதனிடையே கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மலேசியர் என்றும், மற்ற 5 பேரும் சீனப் பிரஜைகள் என்றும் புக்கிட் அமான் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், WeChat மூலம் அதிக சம்பளம் கிடைக்கும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பாதிக்கப்பட்டவர்களை அழைத்து கடத்துவது கும்பலின் செயல்முறையாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே, சோதனையில் 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு கத்தி கைப்பற்றப்பட்டதுடன், பிணைத்தொகையாக ஏற்கெனவே செலுத்தப்பட்டிருந்த 15 ஆயிரம் டாலர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கும்பல் கோலாலம்பூரில் நடந்த மேலும் 2 கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடையதாக போலீசார் நம்புகின்றனர்.
சமூக ஊடகங்களில் அறிமுகமில்லாதவர்களின் வேலை அல்லது சந்திப்பு அழைப்புகளை ஏற்க வேண்டாம் என போலீசார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.








