காஜாங் சில்க் நெடுஞ்சாலையில், சமையல் கியஸ் கலன்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த லாரியை ஓட்டியவர் ஓட்டுநர் உரிமம் இல்லாத 26 வயது வெளிநாட்டு நபர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.33 மணியளவில் மலைப்பாங்கான வளைவு ஒன்றில் திரும்பும்போது, லாரி கட்டுப்பாட்டை இழந்து பலமுறை கவிழ்ந்து தடுப்புச் சுவரில் மோதியது.
லாரியில் இருந்த 49 வயது வெளிநாட்டுப் பயணி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓட்டுநருக்குக் காயம் ஏதுமில்லை.
அதிர்ஷ்டவசமாக விபத்தின்போது கியஸ் எரிவாயு கசிவோ அல்லது தீ விபத்தோ ஏற்படவில்லை. ஓட்டுநருக்கு நடத்தப்பட்ட போதைப்பொருள் சோதனையில் 'நெகட்டிவ்' என முடிவுகள் வந்துள்ளன.
சாலை போக்குவரத்து சட்டம் 43 ஆவது பிரிவின் கீழ் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், லாரியை உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்தார்.








