கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளஞ்சிவப்பு நிற பயணப் பெட்டியால் நேற்று மாலை பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று மாலை 5.55 மணியளவில் யாரும் உரிமை கோராத நிலையில் அந்தப் பயணப் பெட்டி கண்டெடுக்கப்பட்டதாக கூபாங் பாசு மாவட்ட போலீஸ் தலைவர் முகமது ராட்ஸி அப்துல் ரஹிம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பெட்டியை ஸ்கேன் செய்தபோது, அதற்குள் போதைப்பொருள் அல்லது வெடிபொருட்கள் இருக்கக்கூடியதற்கான உருவங்கள் தென்பட்டதாக தெரிவித்தனர். இதனால் போலீசாரின் வெடிகுண்டு அகற்றும் பிரிவினர் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
பாதுகாப்பு நடவடிக்கையாக ஐசிக்யூஎஸ் வளாகம் சுமார் இரண்டு மணி நேரம் மூடப்பட்டது. பின்னர் இரவு 11 மணியளவில் பயணப் பெட்டி திறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
அப்போது பெட்டிக்குள் வெடிபொருட்கள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் சோதனையில் துணிகள், எண்ணெய் கொண்ட ஒரு கொள்கலன், கருப்பு நிற முடி உலர்த்தி, ஷாம்பு மற்றும் லோஷன் ஆகியவை மட்டுமே இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.








