மலேசியர்களைத் திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டவர்கள், திருமணத்தின் அடிப்படையில் மலேசியாவில் தானாகவே வேலை செய்யவோ அல்லது தொழில் நடத்தவோ அனுமதி கிடையாது என மலேசியக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
மலேசியக் குடிமகனின் துணைவர் என்ற பிரிவின் கீழ் விசா வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள், வேலை செய்வதற்காக தனியாக அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அனுமதி வழங்கப்பட்டால், அவர்களின் கடப்பிதழில் அதற்கான ஒப்புதல் பதிவு செய்யப்படும் என குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், தேவையான குடிநுழைவு அனுமதி இல்லாமல் தொழில் நடத்தும் வெளிநாட்டவர்கள் குறித்து பொதுமக்களின் புகார்கள், அதிகாரிகளின் தகவல் மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகள் மூலம் கண்டறியப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
1963-ஆம் ஆண்டு குடிநுழைவு விதிமுறைகளின் 39(b) விதியின் கீழ், அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறும் வெளிநாட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.
இதில் அபராத அறிவிப்பு, அனுமதிச்சீட்டை ரத்து செய்தல், நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான உத்தரவு மற்றும் மலேசியாவுக்குள் மீண்டும் நுழையத் தடை விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் அடங்கும்.
மேலும், செல்லுபடியாகும் அனுமதிச்சீட்டு இல்லாத வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்தும் மலேசியர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, குடிநுழைவுச் சட்டம் 1959/1963 பிரிவு 55B-ன் கீழ் குற்றம் சாட்டப்படலாம் என குடிநுழைவுத் துறை எச்சரித்துள்ளது.








