நேபாளம் மற்றும் சீனாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கியிருக்கலாம் எனக் கருதப்படும் 55 மலேசியர்களை இதுவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்று மலேசிய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
நேபாளத்தில் செயல்பட்ட மலேசிய சிறப்பு பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புக் குழுவான ஸ்மார்ட்டின் களப்பணி முடிவடைந்தாலும், காணாமல் போன மலேசியர்களைத் தேடும் நடவடிக்கை முடிவுக்கு வரவில்லை என விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.
மேலும், ஒவ்வொருவரின் நிலையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், 55 பேரும் தற்போது ‘தொடர்பு கொள்ள முடியாதவர்கள்’ என்ற நிலையிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
நேபாளத்திலிருந்து திங்கள்கிழமை திரும்பிய ஸ்மார்ட் குழு, அங்கு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் சேகரித்த தகவல்கள் குறித்து வெளியுறவு அமைச்சகத்திடம் விளக்கமளிக்க உள்ளது. பாதுகாப்பான மற்றும் அணுகக்கூடிய பகுதிகளில் தரைத் தேடுதல் மற்றும் ட்ரோன்கள் மூலம் வான்வழி கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே, நேபாள அதிகாரிகள் தேடுதல், சரிபார்ப்பு மற்றும் அடையாளம் காணும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். ஸ்மார்ட் குழு, நேபாள மீட்புப் பணியாளர்களுக்கு ட்ரோன் பயிற்சி வழங்கியதுடன், பேரிடர் நடவடிக்கைகளுக்காக 9 ட்ரோன்களை நேபாள அரசிடம் ஒப்படைத்துள்ளது.
அதேவேளையில், கட்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகம், நேபாள அதிகாரிகள் மற்றும் மருத்துவமனைகளிடமிருந்து தொடர்ந்து தகவல்களைப் பெற்று வருகிறது. அதேபோல், பெய்ஜிங்கில் உள்ள மலேசியத் தூதரகம் சீன அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து, அங்கு பாதிக்கப்பட்ட மலேசியர்கள் குறித்த தகவல்களைத் திரட்டி வருகின்றது.
சரிபார்க்கப்பட்ட தகவல்கள் கிடைத்தால், முதலில் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்ட பின்னரே பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தனியுரிமையை மதித்து, உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.








