தமிழக முதலவர் ஜோசப் விஜய்யுடன் திட்டமிடப்பட்டிருந்த இருதரப்பு சந்திப்பு நடைபெறும் வாய்ப்பு தொடர்ந்து இருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பானது புத்ராஜெயா அல்லது சென்னை என இரு இடங்களில் ஏதேனும் ஒன்றில் நடைபெறலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரிக்ஸ் உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா சென்றிருந்த அன்வார், மாநாட்டிற்குப் பிறகு சென்னை சென்று விஜயைச் சந்தித்து விட்டு, அதன் பின்னர் கேரளா மற்றும் மாலத்தீவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.
என்றாலும், இருதரப்பினரின் முன்கூட்டிய நிகழ்ச்சி நிரல்கள் மற்றும் குறுகிய கால அவகாசம் காரணமாக சென்னை பயணம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது.
இதனிடையே, தமிழகத்தின் தந்தி தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அன்வார், விஜய் தரப்பில் ஒத்துழைப்பு இல்லை என ஊடகங்களில் வெளியான தகவலை மறுத்தார்.
ஏற்கனவே லண்டன் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த விஜய், தன்னுடனான சந்திப்பிற்காக தனது நிகழ்ச்சி நிரலை மாற்ற முயன்றதாக அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
தனது நிகழ்ச்சி நிரலை மாற்ற முடியாத நிலையில்தான் விஜயுடனான சந்திப்பு நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், விஜய்க்கு இளம் வாக்காளர்களிடையே இருக்கும் வரவேற்பையும் சீர்திருத்தங்களுக்கான ஆர்வத்தையும் பாராட்டிய அவர், விஜயை “மதிப்பு, கொள்கை மற்றும் நல்லாட்சிக்கான புதிய குரல்” என வர்ணித்துள்ளார்.
மேலும், விஜய்யுடன் கலந்துரையாடிய போது, அதிகாரத்தில் இருக்கும் காலத்தில் விவேகத்துடன் செயல்பட்டு, பல்வேறு சவால்களைச் சமாளிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனத் தாம் எப்போதும் அறிவுறுத்தியதாக அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மேலும், சீர்திருத்தங்களை முன்னெடுப்பதிலும், வறுமை மற்றும் ஊழலைக் களைய வேண்டும் என்பதிலும் விஜய் காட்டும் ஆர்வத்தை அன்வார் பாராட்டியுள்ளார்.








