ஜோகூர் பாருவில் உள்ள தெ மால், மிட்வெலி சௌவுத்கீ வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடையைக் குறிவைத்து விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் போலியானது என அம்மாநில போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான மின்னஞ்சல் கிடைத்ததாக வணிக வளாக நிர்வாகம் போலீசாருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, ஜோகூர் மற்றும் ஜோகூர் பாரு செலத்தான் மாவட்டத் தலைமையகங்களைச் சேர்ந்த வெடிகுண்டு அகற்றும் குழுவினர் பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டதாக மாநில போலீஸ் தலைவர் அப் ரஹமான் அர்சாட் தெரிவித்துள்ளார்.
மேலும், வளாகத்தின் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் சில சந்தேகத்திற்கிடமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை ஆய்வு செய்ததில் வெடிபொருட்கள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட பகுதி பாதுகாப்பானது என அறிவிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஜூலை மாதத்திலும், கோலாலம்பூரில் உள்ள செண்டர்பொயிண்ட் சௌவுத் டவர், மிட்வெலி சிட்டியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.








