கோலாலம்பூர், அக்டோபர் 07-
கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் கிள்ளான், பண்டமாரானில் உள்ள ஓர் இந்தியருக்கு சொந்தமான பங்களா வீட்டில் நடந்த ஆயதமேந்திய துணிகர கொள்ளைச்சம்பபவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 10 ஆடவர்களில் எட்டு பேர் பிடிபட்டுள்ளனர். மேலும் இருவரை போலீசார் முழு வீச்சில் தேடி வருகின்றனர்.
ரொக்கப்பணம், விலை உயர்ந்த சாமி சிலைகள், நகைகள் என சுமார் 6 லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள இந்த பொருட்கள் இந்த கொள்ளைச் சம்பளத்தில் களவாடப்பட்டுள்ளது. இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்று நம்பப்படுகிறது.
அதிகாலை 5 மணியளவில் நிகழ்ந்த இந்த கொள்ளைச்சம்பவத்தில் போலீசார் வருவதை உணர்ந்து இரு கார்களில் தப்பிச் சென்ற கொள்ளையர்களில் ஒருவன் மட்டும் , தப்பிக்க இயலாமல், அந்த பங்களா வீட்டின் அருகிலேயே கால்வாயில் பதுங்கியிருந்தான்.
மோப்ப நாயுடன் போலீசார் மேற்கொண்ட துரித தேடுதல் நடவடிக்கையில் கோத்தா டாமன்சாராவைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் முனியாண்டி என்பவர் பிடிபட்டார்.
` அந்த நபர் கொடுத்த தகவலின் பேரில் அந்த பங்களா வீட்டின் வரிசையிலேயே எண் இடப்படாத ஒரு வீட்டில் தஞ்சோங் மாலிமைச் சேர்ந்த 38 வயது தமிழ்குமரன் பன்னீர் செல்வம் என்ற நபரை போலீசார் பிடித்தனர்.
சனிக்கிழமை இரவு வரையில் தென் கிள்ளான் மாவட்ட போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் மேலும் அறுவர் பிடிபட்டுள்ளனர்.
இன்னும் இரண்டு நபர்களுக்கு வலை வீசப்பட்டுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவத்தில் அந்த வீட்டிலிருந்த மூவரின் 37 வயது நபருக்கு ஆழமான வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்த ஒரு மாது உட்பட மூவர் கட்டிப்போட்டப் பின்னர் இந்த கொள்ளை நடந்துள்ளது.








