ரந்தாவ் பாஞ்சாங், பிப்ரவரி.01-
பெட்ரோல், டீசல் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில், இந்த ஆண்டு முதல் எல்லைப் பகுதிகளில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு முடிவு செய்துள்ளது. சில தரப்பினரின் ஒத்துழைப்புடன் செயல்படும் கடத்தல் கும்பல்களைக் கண்டறியவும், ஆதாரங்களுடன் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இத்தகைய தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்பு பெரிதும் உதவும் என அமைச்சின் அமலாக்கப் பிரிவுத் தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் அடாம் தெரிவித்தார்.
எரிபொருள் நிலைய உரிமையாளர்களின் ஒத்துழைப்புடன் நிறுவப்படும் இந்த கேமராக்கள் முழுமையாக அமைச்சின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதால், சேகரிக்கப்படும் காட்சிகள் நீதிமன்றத்தில் வலுவான ஆதாரங்களாகப் பயன்படுத்தப்படும். மேலும், எல்லைப் பகுதிகளில் உள்ள குடிநுழைவு, சுங்கச்சாவடிகளில் வெளிநாட்டினர் எரிபொருள் வாங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள், கட்டுப்பாடுகள் குறித்த 17 எச்சரிக்கைப் பலகைகளும் பொதுமக்களின் விழிப்புணர்விற்காக நிறுவப்பட்டுள்ளதாக அஸ்மான் அடாம் மேலும் கூறினார்.








