கோலாலம்பூர், பிப்ரவரி.23-
செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக்கின் கார், புக்கிட் கியாராவில் உள்ள ஒரு கிளப்பின் வாகன நிறுத்துமிடத்தில் மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த போது, அவரது வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே இருந்த முக்கியப் பொருட்கள் திருடப்பட்டுள்ளன. இதில் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்கான மடிக்கணினி, முக்கியமான ஆவணங்கள் மற்றும் சில தனிப்பட்ட உடமைகள் திருடு போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து திரேசா கோக் உடனடியாகக் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு பகுதியில், மக்கள் பிரதிநிதியின் வாகனமே குறி வைக்கப்பட்டு உடைக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பாதுகாப்புக் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட திருட்டா அல்லது சாதாரணக் கொள்ளைச் சம்பவமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.








