திரெங்கானு,ஆகஸ்ட் 03-
பெண் கலைஞர்கள் மேடைகளில் தோன்றி, பாடுவதற்கு கோலத்திரெங்கானு நகராண்மைக்கழகம் தடை விதித்துள்ளது.
முஸ்லிம்கள் மத்தியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த இந்த விதிமுறை, தற்போது முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியிலும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாக Chiana Press ( சைனா பிரஸ் ) சீன நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கோலத்திரெங்கானுவில் 76 ஆண்டு காலம் பழமை வாய்ந்த KUAN TI சீனக்கோவிலின் வருடாந்திர திருவிழாவையொட்டி கடந்த ஜுலை 29 ஆம் தேதி கலை நிகழ்ச்சி நடத்தப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆடல், பாடல், நடனம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், அந்த கலைவிழாவில் படைக்கப்படுவதற்கு கோயில் நிர்வாகம் திட்டமிட்டு இருந்தது. இது தொடர்பாக பெர்மிட் பெறுதற்கு அனுமதி கோரப்பட்டது.
அனுமதி அளிப்பதாக வாய்மொழி உத்தரவாதத்தை வழங்கிய கோலத்திரெங்கானு நகராண்மைக்கழம், ஒரு நிபந்தனையை மட்டும் முன்வைத்தாக கூறப்படுகிறது. பெண் கலைஞர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அது தெரிவித்துள்ளது.
பெரிக்காத்தான் நேஷனல் தலைமையிலான பாஸ் கட்சி, திரெங்கானு மாநிலத்தை நிர்வகித்து வரும் வேளையில் முன்பு முஸ்லீம் பெண் பாடகிகளுக்கு மட்டுமே இந்த தடை விதிக்கப்பட்டு இருந்தது.
தற்போது முஸ்லீம் அல்லாதவர்களுக்கும் இந்த தடை விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த சீன நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.








