கோலாலம்பூர், ஜூலை.21-
வரி தொடர்பில் அமெரிக்காவுடன் நடத்தப்படும் பேச்சு வார்த்தை உள்பட நாட்டின் கொள்கைகளைப் பாதிக்கும் எந்தவொரு நெருக்குதலுக்கும் மலேசியா ஒரு போதும் அடிபணியாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தகம் அதிகமாக இருந்த போதிலும் வரி தொடர்பான பேச்சு வார்த்தையில் மலேசியா ரெட்லைன் எனப்படும் கூடியபட்ச எல்லை வரம்பைக் கொண்டுள்ளது. வெளி தரப்பினர் ‘பாகுபாடானது‘ எனக் கூறினாலும் பூமிபுத்ரா கொள்கைகள் விஷயத்தில் யாரும் இடையூறு ஏற்படுத்த முடியாது என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவுடனான இந்தப் பேச்சு வார்த்தையில் உள்நாட்டு நிறுவனங்களுக்கான வாய்ப்புகளும் தற்காக்கப்பட வேண்டும் என்று நிதியமைச்சருமான அவர் வலியுறுத்தினார்.
சந்தை எல்லையை விரிவுபடுத்துவதற்கு ஏதுவாக சீனா மற்றும் ஆசியான் நாடுகளுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவற்கும் நாட்டின் நலன் பாதுகாக்கப்படுவதற்கும் மலேசியா விரிவான மற்றும் உறுதியான அணுகுமுறையைக் கடைபிடிக்கும் என அன்வார் சொன்னார்.








