கோலாலம்பூர், பிப்ரவரி.26-
புக்கிட் காயு ஹித்தாம், மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்பின் கமாண்டர் நசாருடின் நாசீர் செலுத்திய வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நம்பப்படும் சந்தேக நபர் ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று அதிகாலை நிகழ்ந்த இச்சம்பவத்தைத் தொடர்ந்து, 24 மணி நேரத்திற்குள்ளாகவே இந்த அதிரடிக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், எல்லைப் பாதுகாப்பில் அரசு ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாது என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.
நேற்று அதிகாலை சுமார் 5.40 மணியளவில், கமாண்டர் நசாருடின் நாசீர் தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த கருப்பு உடை அணிந்த இருவர் அவரது வாகனத்தை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டனர். இந்தத் தாக்குதலில் அவரது காரின் கதவுகள் சேதமடைந்த போதிலும், நசாருடின் நாசீர் காயமின்றி உயிர் தப்பினார்.








