கோலாலம்பூர், டிச.3-
மலேசிய இராணுவப்படையின் உயர் கல்விக்கூடமான மலேசிய தேசிய தற்காப்பு பல்லைக்கழகத்தில் தொடரும் துன்புறுத்தல் சம்பவங்களை கையாள தவறினால் தளபதியும், இதற்கு பொறுப்பான கமாண்டனும் பதவி விலக வேண்டும் என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழகத்தில் துன்புறுத்தலினால் உயிரிழப்பு மற்றும் கடும் காயங்கள் ஏற்படும் அளவிற்கு நிலைமை மோசமாகி வருவது குறித்து மாமன்னர் தமது வருத்தத்தை தெரிவித்துக்கொண்டார்.
இராணுவப்படையின் மதிப்புமிகுந்த பல்கலைக்கழகமாக விளங்கும் மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழத்தில் நற்பெயரை காப்பதற்கு ஆரோக்கியமற்ற இது போன்ற கலாச்சாரத்திற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மாமன்னர் கேட்டுக்கொண்டார்.
ஓர் உயர் இராணுவ அதிகாரியை உருவாக்குவதற்கு மனோரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடும் பயிற்சிகள் அவசியமான ஒன்று என்பதை மாமன்னர் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால், அது பயிற்சி பெறுகின்றவர்களுக்கு கடுங்காயங்கள் அல்லது உயிரிழப்புகள் ஏற்படும் அளவிற்கு நிலைமை மோசமாகி விடக்கூடாது என்று மாமன்னர் நினைவுறுத்தினார்.
இதில் கவலை தரும் விஷயம் என்னவென்றால் இது போன்ற சம்பவங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்படாமல் தொடர்ந்து கொண்டு இருப்பது வருத்தத்தை தருகிறது எனறு மாமன்னர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்பு இது போன்ற சம்பவம் நீதிமன்றம் வரை சென்று இருப்பதையும் மாமன்னர் சுட்டிக்காட்டினார்.
கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் இன்று நடைபெற்ற மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்கி, உரையாற்றுகையில் மாமன்னர் இதனை தெரிவித்தார்.








