கடந்த 2025-ஆம் ஆண்டில் பதிவான 91 ஆயிரத்து 456 விபத்துகளில், 50.9 விழுக்காடு அல்லது 46 ஆயிரத்து 542 சம்பவங்கள் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்று வரும்போது ஏற்பட்டவை என்று சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோ தெரிவித்துள்ளது.
குறிப்பாக, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மத்தியில் இந்த எண்ணிக்கை கவலையளிக்கும் வகையில் அதிகரித்துள்ளதாக பெர்கேசோவின் தலைமை நிர்வாக அதிகாரி முகமட் அஸ்மான் அஜீஸ் தெரிவித்தார். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்தவர்கள் என்றும், இதற்குப் பலன் வழங்குவது மட்டுமே தீர்வாகாது என்றும் அவர் கூறினார்.
இதனைத் தடுக்க, போலீசாரின் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை, போக்குவரத்து அமைச்சு, மற்றும் சாலைப் போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே ஆகியவற்றுடன் இணைந்து பெர்கேசோ "மைரைடர்" என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பொறுப்புடனும், கவனமாகவும், உயிரின் மதிப்பை உணர்ந்தும் செயல்பட வேண்டும் என்பதே இப்பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும் என்று அஸ்மான் அஜீஸ் விளக்கினார்.








