அலோர் ஸ்டார், ஏப்ரல்.26-
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு யுயுஎம் எனப்படும் வட மலேசியப் பல்கலைக்கழக விடுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகக் கூறப்படும் மாணவி எஸ். வினோசினியின் தந்தை, பல்கலைக்கழகத்திற்கு எதிராகத் தொடர்ந்த 3 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரும் வழக்கை அலோர் ஸ்டார் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மாணவியின் மரணத்திற்கு மின்சாரம் தாக்கியதே காரணம் என்பதையும், பல்கலைக்கழகத்தின் கவனக்குறைவு இதில் உள்ளது என்பதையும் வாதி ஆர். சிவகுமார் நிரூபிக்கத் தவறி விட்டதாக நீதிபதி Dr John Lee Kien How @ Mohammad Johan Lee தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். எரிசக்தி ஆணையம் நடத்திய ஆய்வில் விடுதியின் மின்சாரக் கட்டமைப்பும், தொடர்புடைய சாதனங்களும் சரியாகச் செயல்பட்டது உறுதியானதைக் குறிப்பிட்ட நீதிபதி, புகார்தாரருக்கு 5,000 ரிங்கிட் நீதிமன்றச் செலவுத் தொகையை வழங்குமாறு உத்தரவிட்டார்.
கணக்கியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவியான வினோசினி, கடந்த 2022-ஆம் ஆண்டு மே 21 அன்று தனது விடுதி அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது மரணத்திற்கு நீதி கேட்டுத் தொடரப்பட்ட இந்த வழக்கு பொதுமக்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றிருந்தது. நீதிமன்றத்தின் இந்த முடிவை எதிர்த்துத் தாங்கள் விரைவில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகப் புகார்தாரரின் வழக்கறிஞர் எம். மனோகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.








