கோலாலம்பூர், பிப்ரவரி.25-
கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச குடிநுழைவுத் துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையில், "டேவிட் லாரன்ஸ்" என்ற பெயரில் இயங்கி வந்த அனைத்துலக போலி விசா தயாரிப்புக் கும்பல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.
ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல தலா 20,000 ரிங்கிட் வரை பெற்றுக் கொண்டு போலி விசாக்களை வழங்கி வந்த இந்தக் கும்பலின் பின்னணியில் இருந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 வயது மதிக்கத்தக்க வங்காளதேசத்தைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவி, கடந்த 8 மாதங்களாக இந்த சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வங்காளதேசத்தில் உள்ள வாடிக்கையாளர்களின் கடப்பிதழ்களைச் சர்வதேச கொரியர் மூலம் மலேசியாவிற்கு வரவழைத்து, இங்குள்ள ரகசிய இடத்தில் வைத்து போலி ஐரோப்பிய விசாக்களைப் பதித்து மீண்டும் அனுப்பி வைப்பதே இவர்களது திட்டமாகும்.
கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி கோலாலம்பூர் சுங்கை பீசி பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில், ஏராளமான வங்காளதேச கடப்பிதழ்கள், வெளிநாட்டுப் போலி முத்திரைகள், கணினிகள் மற்றும் போலி ஆவணத் தயாரிப்பு உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த திங்கட்கிழமை கோலாலம்பூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இந்தத் தம்பதியினர், தங்கள் மீதான 9 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டனர். அவர்களுக்கு மொத்தம் ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. இருப்பினும், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறியதால், இருவருக்கும் 45 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று குடிநுழைவுத்துறை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








