கோலாலம்பூர், பிப்ரவரி.03-
யாயாசான் அகால்பூடி அறவாரிய ஊழல் வழக்கிலிருந்து தன்னை முழுமையாக விடுவிக்கக் கோரி, அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிட், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
விசாரணையைத் தொடர்வதற்குத் தேவையான ஆதாரங்கள் இல்லாததால், இவ்வழக்கில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் தேவையில்லை என கடந்த ஜனவரி 8-ஆம் தேதி, சட்டத்துறை அலுவலகம் அறிவித்ததையடுத்து, ஸாஹிட் தரப்பில் இந்நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக விடுதலை அளிக்காமல் DNAA எனும் விடுவிப்பு வழங்கப்பட்டிருந்த ஸாஹிட், கடந்த ஜனவரி 28-ஆம் தேதி, மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அம்மனுவுடன் அவசரத் தேவையை குறிப்பிடும் சான்றிதழையும் அவர் சமர்ப்பித்தார்.
இந்நிலையில், நீதிபதி நூருல்ஹூடா நூராய்னி நோர், இன்று செவ்வாய்க்கிழமை இவ்வழக்கை விசாரிக்கவிருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தான் இவ்வழக்கு ஆவணங்களானது சட்டத்துறை அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட காரணத்தினால், துணை அரசு தரப்பு வழக்கறிஞர் பாடியுஸ் ஸாமான் அஹ்மாட் விசாரணையை ஒத்தி வைக்குமாறு கோரினார்.
இதனையடுத்து, இவ்வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 24-ஆம் தேதிக்கு நீதிபதி நூருல்ஹூடா ஒத்தி வைத்தார்.
முன்னதாக, கடந்த 2024-ஆம் ஆண்டு, செப்டம்பர் 4-ஆம் தேதி, இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கோலின் லாரன்ஸ் செக்குஏரா, ஊழல், பணம் சுத்திகரிப்பு மற்றும் நம்பிக்கை மோசடி தொடர்பான 47 குற்றச்சாட்டுகளில் ஸாஹிட்டுக்கு DNAA வழங்கினார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC மேல் விசாரணை நடத்துவதற்காக இந்த விடுதலையானது வழங்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.








