கோலாலம்பூர், மே.25-
லிம்ஃபோமா ஹாட்கின் எனப்படும் மூன்றாம் கட்ட இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 36 வயது முகமட் ஸாக்கி யமானி அஸ்மான், சுங்கை பஹாங்கில் 550 கிலோமீட்டர் தூரம் தனி ஆளாக காயாக் படகு பயணத்தை நேற்று தொடங்கினார். "ஸாக்கி பிஜாக்'" என்று அன்புடன் அழைக்கப்படும் இவர், சுங்கை ஜெலாய் நதியில் தனது பயணத்தைத் தொடங்கி, மே 31 ஆம் தேதிக்குள் பெக்கானை அடைய ஒன்பது நாட்கள் இலக்கு நிர்ணயித்துள்ளார். 2014 இல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஸாக்கி, பல ஆண்டுகளுக்கு முன் முழுமையாக குணமடைவதற்கு முன் இருமுறை அந்நோயால் மீண்டும் பாதிக்கப்பட்டார்.
முன்னதாக, இவர் " ஒரு ரிங்கிட்டுடன் போர்னியோ சுற்றுப்பயணத்தையும், 13 ரிங்கிட்டுடன் 13 நாள் தீபகற்ப மலேசிய சுற்றுப்பயணத்தையும், வெறும் 60 காசுடன் கினபாலு மலை சுற்றுப்பயணத்தையும் மேற்கொண்டு பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். தற்போது அவர் தொடங்கியுள்ள இந்தக் காயாக் சாகசம், புற்றுநோயாளிகளுக்கு உத்வேகமளிப்பதையும், வாழ்க்கை மீதான நம்பிக்கையை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என நம்பிக்கை மிகுந்த புன்னகையுடன் தெரிவித்தார்.








