காதலியை மடியில் அமர வைத்து சொகுசு விரைவுப் பேருந்தை ஓட்டிய விவகாரத்தில், சம்பந்தப்பட்ட ஓட்டுநருக்கும், அவரது காதலிக்கும் ஜாசின் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 4 நாட்கள் ரிமாண்ட் வழங்கியுள்ளது.
இந்த ரிமாண்ட் உத்தரவை நீதிபதி மசானா சினின், வரும் ஞாயிற்றுக்கிழமை வரை அமல்படுத்த அனுமதி வழங்கினார்.
இச்சம்பவத்தில், 36 வயதுடைய பேருந்து ஓட்டுநரும், அவரது 21 வயதுடைய காதலியும் நேற்று போலீசாரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டு, அவர்களிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு பேருந்து நிறுவனத்தில் பயணச்சீட்டு விற்பனையாளராகப் பணிபுரியும் அப்பெண், அந்த ஓட்டுநருடன் கடந்த ஐந்து மாதங்களாகப் பழகி வருவதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவ்விருவரும் சுமார் இரண்டு மணி நேரங்கள் விசாரிக்கப்பட்டு, நேற்று காவலில் வைக்கப்பட்டதாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் லீ ராபர்ட் குறிப்பிட்டுள்ளார்.








