கோலாலம்பூர், அக்டோபர்.28-
மலேசியக் கடலில் கடற்கொள்ளையர்கள் இல்லை என்றும், சிறிய அளவிலான கடல்சார் குற்றவாளிகள் மட்டுமே உள்ளனர் என்றும் நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை கூறப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், ஜோகூர் மற்றும் மலாக்கா கடற்பகுதிகளில் பதிவான சம்பவங்கள் பெரும்பாலும் சிறிய அளவிலான திருட்டுகள் அல்லது கடத்தல் முயற்சிகள் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சிஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் விளக்கமளித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் கடல் சட்ட ஒப்பந்தத்தின் படி, கடற்கொள்ளை என்பது நாடுகளின் அதிகார வரம்பிற்கும் அப்பாற்பட்ட உயர் கடல்களில் நடக்கும் செயல்கள் என்று குறிப்பிட்டுள்ள சைஃபுடின், மலேசியக் கடல் பகுதியில் நடப்பது ஆயுதமேந்திய கொள்ளை அல்லது கடலில் திருட்டு என வகைப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், கடந்த இரு ஆண்டுகளை ஒப்பிடுகையில், ஜோகூர் கடல் பகுதியில் குற்றங்கள் பெருமளவில் குறைந்திருப்பதாகவும் தனது எழுத்துப்பூர்வ பதிலில் சைஃபுடின் குறிப்பிட்டுள்ளார்.








