இம்மாதத் தொடக்கத்தில் கோலா கிராயில் சுல்தான் இஸ்மாயில் பெத்ரா மருத்துவமனை தங்கும் விடுதியில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் மரணமடைந்ததற்கும், அதே மருத்துவமனையில் நிகழ்ந்த பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை.
ஒரே இடத்தில் நடந்த அவ்விரு சம்பவங்களிலும் சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழிகளும் பாதிக்கப்பட்டவர்களும் வெவ்வேறு நபர்கள் என கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் முகமது யூசோப் மாமத் தெரிவித்தார்.
பெண் பயிற்சி மருத்துவரின் மரணம் இன்னும் விசாரிக்கப்பட்டு வருகிறது. அது தற்போதைக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இம்மாதம் 6 ஆம் தேதி மருத்துவமனை தங்கும் விடுதி அறையில் 29 வயதான அந்தப் பெண் பயிற்சி மருத்துவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது தொடர்பில் இதுவரை 10க்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பயிற்சி மருத்துவர் ஒருவர் மீது, ஒரு பெண்ணைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது மற்றும் ஆபாசப் படங்களை வைத்திருந்தது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.








