கோலாலம்பூர், செப்டம்பர்.03-
வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அரிய வானியல் நிகழ்வு நடைபெறவிருக்கிறது. அன்று ஒரு முழு சந்திரக் கிரகணம் நிகழ உள்ளது. அப்போது பிளட் மூன் Blood Moon என்று அழைக்கப்படும் நிலா, ரத்த நிலாவைப் போல் சிவப்பு நிறமாக மாறவிருக்கிறது.
ஒரே நேர்க்கோட்டில் சூரியன், பூமி, நிலவு வரும் போது, நடுவிலுள்ள பூமி, சூரிய ஒளியை மறைத்து, அதன் நிழல்தான் நிலவில் விழும். இதுதான் சந்திரக் கிரகணமாகும்.
இந்த அரிய நிகழ்வை மலேசியா உட்பட ஆசியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் முழுமையாகக் காண முடியும். உலகின் மற்ற பல பகுதிகளில், கிரகணத்தின் சில கட்டங்களை மட்டுமே காண முடியும் என்று கூறப்படுகிறது.
மலேசிய விண்வெளி மையம், தனது முகநூலில் பதிவு செய்த தகவலின்படி இந்த அதிசய நிகழ்வு செப்டம்பர் 7 அல்லது 8 ஆம் தேதி நிகழலாம் என்று கணித்துள்ளது.
மலேசிய நேரப்படி இரவு 11.28 மணி முதல் அதிகாலை 4.55 மணி வரை அது காட்சியளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.








