புக்கிட் மெர்தாஜம், நவ.14-
டிரெய்லர் லோரியிலிருந்து பிடிமானத்தை தகர்த்துக்கொண்டு, கொள்கலன் ஒன்று வாகனங்கள் மீது விழுந்த சம்பவத்தில் பெண் ஒருவர் பலியானதைத் தொடர்ந்து அந்த டிரெய்லர் லோரியின் ஓட்டுநர், விசாரணைக்கு ஏதுவாக நான்கு நாள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பினாங்கு, புக்கிட் மெர்தாஜம், ஜாலான் புக்கிட் தெங்காவில் நேற்று காலை 9.16 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 21 வயது சீனப்பெண் உயிரிழந்தார். 25 வயதுடைய மேலும் ஒரு நபர் கடும் காயங்களுக்கு ஆளாகி புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.
இச்சம்பவத்தில் 3 கார்கள், இரண்டு லோரிகள் சேதமுற்றன.
51 வயது லோரி ஓட்டுநர் மாஜிஸ்திரேட் முகமட் ஹரித் மஸ்லான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவரை நான்கு நாள் தடுத்துவைப்பதற்கான அனுமதியை போலீசார் பெற்றுள்ளனர்.
நான்கு போலீஸ்காரர்களின் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட அந்த லோரி ஓட்டுநர், 1987 ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
சம்பவம் நிகழும் போது அந்த லோரி ஓட்டுநர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பது சிறுநீர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.








