கடந்த ஜனவரி மாதம் மது போதையில் கார் ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 33 வயதான டி. கஜேந்திரநாத் என்பவருக்கு மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஒரு நாள் சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதித்தது.
மாஜிஸ்திரேட் நூர் அபிகா ராதியா சைனுரின் முன்னிலையில் நிறுத்தப்பட்ட கஜேந்திரநாத், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அபராதத்தைச் செலுத்தத் தவறினால் ஏழு மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் மாஜிஸ்திரேட் நினைவுறுத்தினார்.
கடந்த ஜனவரி 17-ம் தேதி இரவு 11.50 மணியளவில் ஜாலான் டத்தோ முகமட் ஜின் பகுதியில் கஜேந்திரநாத் வாகனம் ஓட்டியபோது, அவரது இரத்தத்தில் ஆல்கஹால் அளவு 74 மி.கி ஆக இருந்தது கண்டறியப்பட்டது.
லாரி ஓட்டுநராகப் பணிபுரியும் கஜேந்திரநாத், தனது பெற்றோரைப் பராமரிக்க வேண்டியிருப்பதால் குறைந்தபட்ச தண்டனை விதிக்குமாறு முறையிட்டார். இருப்பினும், சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் அவருக்கு இந்தத் தண்டனையுடன், இரண்டு ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.








