சிங்கப்பூரின் மூத்த அமைச்சரான லீ சியன் லூங், 5 நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணமாக, மலேசியாவின் பகாங் மற்றும் திரங்காணு மாநிலங்களுக்கு வருகை புரியவுள்ளார்.
இன்று மே 4-ஆம் தேதி தொடங்கும் அவரது பயணமானது, மே 8-ஆம் தேதி நிறைவடைவதாக பிரதமர் துறை அலுவலகம் அறிக்கை விடுத்துள்ளது.
மேன்மை தங்கிய பகாங் மாநில சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் அவரது துணைவியார் துங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கண்டாரியா ஆகியோரின் அழைப்பை ஏற்று லீ சியன் லூங்-இன் பயணம் அமைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, பகாங் சுல்தானின் அரச விருந்து உபசரிப்பில் தனது மனைவி ஹோ சிங் -உடன் கலந்து கொள்ளும் லீ சியன் லூங், பின்னர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில்-ஐ சந்திக்கிறார்.
அவருடன் மேலும் சில அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர்.
மேலும், திரங்காணு மாநில பயணத்தின் போது, அம்மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மத் சம்சுரி மொக்தார் மற்றும் மாநிலத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








