கோலாலம்பூர், ஆகஸ்ட்.25-
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, நடைப்பாதை நில அமிழ்வில் சாக்கடைக் குழியில் விழுந்து காணாமல் போன இந்தியப் பிரஜை விஜயலெட்சுமி மறைந்து, நேற்று முன்தினம் ஆகஸ்ட் 23 ஆம் தேதியுடன் சரியாக ஓராண்டு பூர்த்தியானது.
தனது தாயார் விஜயலெட்சுமியின் ஓராண்டு தலைத்திவசம் திரும்பியதைத் தொடர்ந்து அவரின் 25 மகன் சூரியா, இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு வருகை தந்து, தனது தாயார் உயிரிழந்த மஸ்ஜிட் இந்தியாவில் சம்பவ இடத்தில் தலைத்திவசச் சடங்குகளைச் செய்து, தமது தாயாரின் ஆத்மா இளைப்பாற சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
சம்பவ இடத்தில் தனது தாயாரின் புகைப்படத்தை வைத்து மாலை அணிவித்து தலை வாழை இலையில் பழங்கள், சைவ சாப்பாடு மற்றும் தனது தாயாருக்குப் பிடித்தமான பலகார வகைகளையும், பூஜைப் பொருட்களையும் வைத்து இளைஞர் சூரியா வழிபட்டது பொதுமக்களின் மிகுந்த கவன ஈர்ப்பாக அமைந்தது.








