Apr 18, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா நீரிணையைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் / அரசாங்கத்திற்கு பெரிக்காத்தான் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

மலாக்கா நீரிணையைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் / அரசாங்கத்திற்கு பெரிக்காத்தான் வலியுறுத்து

Share:

ஹார்முஸ் நீரிணை முற்றுகையிடப்பட்டதைத் தொடர்ந்து, மலாக்கா நீரிணையின் எதிர்காலம் குறித்து கவலைகள் எழுந்துள்ள நிலையில், தேசிய நலன்களை பாதுகாக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.

இது குறித்து பெரிக்காத்தான் நேஷனல் பொதுச்செயலாளர் தக்கியுடின் ஹசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா மற்றும் சீனா போன்ற பெரிய நாடுகளுக்கு இடையில் அதிகரித்து வரும் உத்திசார் மற்றும் பொருளாதார போட்டி, தென்கிழக்கு ஆசியாவின் நிலவரத்தை மாற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடல் பகுதிகளில் அதிகரிக்கும் இராணுவ இருப்பு, முக்கிய கடல் பாதைகளில் போட்டி, விநியோக சங்கிலி மாற்றங்கள் மற்றும் பொருளாதார அழுத்தங்கள் ஆகியவை மலேசியாவுக்கும் பிராந்தியத்திற்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென்கிழக்கு ஆசியா, குறிப்பாக மலாக்கா நீரிணையானது, வெளிநாட்டு தலையீடு அல்லது இராணுவ அழுத்தங்களிலிருந்து விடுபட்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈரானும் அமெரிக்காவும் ஹார்முஸ் நீரிணையை முற்றுகையிட்டுள்ள நிலையில், ஆசிய வட்டாரங்களில் மலாக்கா நீரிணையின் எதிர்காலம் குறித்த கவலையை மீண்டும் உயிர்ப்பித்துள்ளதாக புளூம்பெர்க் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

உலக வர்த்தகத்தின் சுமார் 40 விழுக்காடு இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் மலாக்கா நீரிணை வழித்தடம் வழியாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related News