சரவாக்கில் நிலவி வரும் புகைமூட்ட நிலைமை காரணமாக மேக விதைப்பு நடவடிக்கை மேற்கொண்டு, செயற்கை மழையை உருவாகும் திட்டம் இல்லை என அம்மாநில இயற்கை வளங்கள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துணையமைச்சர் டத்தோ லென் தாலிப் சாலே தெரிவித்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 14 அல்லது 15ஆம் தேதிக்குள் சரவாக்கின் சில பகுதிகளில் மழை பெய்ய 30 சதவிகித வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் வாரியம் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, மேக விதைப்பு அவசியமா என்பதை தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், மேற்கு கலிமந்தானில் இருந்து எல்லை தாண்டிய புகைமூட்டம் சரவாக்கை பாதித்து வருவதாகவும், தென்கிழக்குப் பருவக் காற்று புகையை மாநிலத்தை நோக்கி கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே காற்றின் தரக் குறியீடு 200 ஐத் தாண்டிச் செல்வதால் அம்மாநிலத்தில் சுமார் 6 பள்ளிகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது








