ஆபத்தான போதைப்பொருட்களைக் கடத்தியதாக ஈப்போவைச் சேர்ந்த கணவன், மனைவி மீது இன்று புதன்கிழமை ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
44 வயதான தியோ வாய் லூன், அவரது 38 வயது மனைவியான லிம் சுக் பெய் ஆகியோர், மாஜிஸ்திரேட் எஸ். புனிதா முன்னிலையில் இன்று குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது அவற்றைப் புரிந்துகொண்டதாகத் தலையசைத்தனர்.
எனினும், இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் அவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.
குற்றச்சாட்டின்படி, இருவரும் இணைந்து 480.60 கிராம் எடையுள்ள மெத்திலீண்டியோக்சி மெத்தாம்படமைன் எனப்படும் ஆபத்தான போதைப்பொருளை கடத்தியதாகக் கூறப்படுகின்றது.
இச்சம்பவம் கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி இரவு சுமார் 10.30 மணியளவில், ஈப்போ,மேடான் பெர்ச்சாம் பிஸ்தாரி பகுதியில் உள்ள பெர்ச்சாம் பிஸ்தாரி 4 என்ற இடத்திலுள்ள அறை ஒன்றில் நடந்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1952- ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 39B(1)(a), குற்றவியல் சட்டம் பிரிவு 34-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ விதிக்கப்படலாம்.








